6 மாதங்களுக்கு வேண்டிய உணவை உடன் எடுத்து செல்லும் விவசாயிகள்
டெல்லி நோக்கிய பேரணியில் 6 மாதங்களுக்கு வேண்டிய உணவை விவசாயிகள் தங்களுடன் எடுத்து செல்கின்றனர்.
விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக செல்ல முடிவு செய்தனர். இந்த பேரணி இன்று 2வது நாளாகவும் தொடர்ந்தது.
பேரணியில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும், அரியானா மற்றும் பஞ்சாப் இடையே அம்பாலா அருகே அமைந்த சம்பு எல்லை பகுதியில், விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சாலையின் குறுக்கே தடுப்பான்களும் வைக்கப்பட்டு உள்ளன.
நாங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் பணியை உறுதி செய்வோம் என அம்பாலா எஸ்.பி. கூறியுள்ளார்.
டெல்லி நோக்கிய தங்களுடைய டிராக்டர் பேரணிக்கு தயாராவதற்காக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாயிகளுக்கான அமைப்பு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து சென்றனர்.
இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்த விவசாயிகளில் ஒருவரான அமன்தீப் என்பவர் கூறும்பொழுது, டெல்லியில் இருப்பதற்கு ஏதுவாக 5 முதல் 6 மாதங்களுக்கு வேண்டிய ரேசன் பொருட்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
நாங்கள் அனைவரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு தேவையான உணவை குருத்வாராக்கள் அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றன என கூறினார்.
Comments