ரவீந்திரநாத்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம்
தனக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே தொகுதியான தேனியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். அவருடைய வெற்றியை எதிர்த்து தேனி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றது, பணப்பட்டுவாடா நடைபெற்றது, எனவே அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்கக் வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த மனு மீதான வாதங்கள் முடிவுற்ற நிலையில், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற ரவீந்திரநாத்தின் மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ், ரவீந்திரநாத்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாக கூறி தனக்கெதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் தீர்மானிக்கும். எனவே, இந்த வழக்குதான், ரவீந்திரநாத் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. மத்திய அமைச்சராக ரவீந்திரநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் வெளியாகியுள்ள கோர்ட் உத்தரவு முக்கியமாக பார்க்கப்படுகிறது
Comments