கொலு பொம்மைகள் கூறும் உண்மைகள்!!
கொலு பொம்மைகள் கூறும் உண்மைகள்!!
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே பொம்மைகளுக்கு கிராக்கி வந்து விடும். குழந்தைகள் விளையாட பொம்மைகள் வாங்குவதல்ல, கும்பிடும் தெய்வமாகப் பாவித்து பொம்மைகளை வாங்குவதுதான் இந்த மாதத்தின் சிறப்பு. இந்த பொம்மைகளின் மூலமாக கொலு வைப்பதில் எண்ணற்ற உண்மைகள் அடங்கியுள்ளன என்ற தத்துவத்தை முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
கொலு பொம்மைகளை வைப்பதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் விதத்திலும், முடிவில் நாம் தெய்வ நிலையை அடைய வேண்டுமென்ற விதத்திலும் கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்கின்றோம். இதை உணர்ந்து வழிபட்டால் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற மகத்தான தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
தற்காலத்தில் எண் கணித அடிப்படையில் படிகளின் எண்ணிக்கையைத் தங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் அமைத்துக் கொலு வைக்கின்றார்கள். சிலர் பிளாஸ்டிக் பொம்மைகளையும் சேர்த்து கொலு வைக்கின்றார்கள். ஐம்பூதங்களில் ஒன்றான மண் பொம்மைகளை வரிசைப்படுத்தி வணங்கினால் தான் மகத்துவங்கள் அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பது ஐம்பூதங்கள் உள்ளன. அதில் ஒன்றான நிலத்திலிருந்து எடுக்கும் மண் மூலம் நாம் செய்யும் பொம்மைகள் மகத்துவம் வாய்ந்தவை. மண் பானை சமையல் மகத்துவம் வாய்ந்தது என்பார்கள். பயிர்களை வளர்க்கும் கருவியாக மண் உள்ளது. பூமியில் உயிர்கள் வளர்ச்சி பெறும் தத்துவத்தை விளக்குவதே கொலு பொம்மைகள் நமக்கு கூறும் உண்மைகள் ஆகும்.
‘நவராத்திரி’ என்றால் ‘ஒன்பது நாள் இரவு’ என்று பொருள். ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’. ‘நவக்கிரகம்’ என்றால் ‘ஒன்பது கிரகம்’. எனவே நவக்கிரகத்தின் அருளோடு நவராத்திரியில் வழிபடுவதை வலியுறுத்தும் விதத்தில் தான் ஒன்பது படிகளில் கொலு வைக்கும் தத்துவம் உருவானது.
கீழிருந்து மேல்நோக்கிப் போகும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகைகளை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் இரண்டறிவு பிராணிகளான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.
மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.
நான்காவது படியில் நண்டு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும். இவை நான்கு அறிவுள்ளவை.
ஐந்தாவது படியில் விலங்கு, பறவை போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட, பேசும் சக்தி பெற்ற மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்கள் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரையும் வைத்து வழிபட வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக விளங்கும் கொலுபீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
பொம்மைகள் கூறும் இந்த உண்மைகளை நாம் அறிந்து கொண்டு செயல்பட்டால் நன்மைகள் வந்து சேரும். செட்டிநாட்டுப் பகுதிகளில் ‘மரப்பாச்சி’ பொம்மைகளைக் கொடுத்து கடவுள் வழிபாட்டில் இருந்து, தாய் தந்தை யரைப் பேணி வைத்துக் கொள்வது வரை விளையாட்டில் வலியுறுத்துவர்.
விக்கிரமாதித்தன் காலத்தில் கூட சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் முப்பத்தி இரண்டு பொம்மைகள் இருந்து கதை சொன்னதாக வரலாறுகள் சொல்கின்றன. தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். எப்படி வைத்தாலும் அது பழைய நிலைக்கு வந்து விடும். எல்லோரிடமும் வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது தலையாட்டிப் பொம்மை. இந்தப் பொம்மைகளைப் புரட்டாசி மாதத்தில் போற்றித் துதிப்போம். உண்மைகளை வாழ்வில் ஏற்று நடப்போம்.
Comments