தமிழ்ச்சுவை
"தமிழ்ச்சுவை"
இயற்கை வனப்பில் எண்ணற்ற காட்சிகளால் அதிசயங்களை தன்னுள் அடக்கி மகிழ்வை தந்திடும் புவி
இனிய தமிழும், இலக்கணங்களை வேராக வைத்து, சீராய் பாட்டுக்களை தந்து பல்வேறு புலவர்களின் இலக்கியச் சிந்தனையை வெளிக் கொணர்ந்தது கவி.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
என்னும் திருக்குறளுக்கு ஒப்ப, தமிழ் மொழியிலுள்ள, இலக்கண இலக்கியங்களைப் படிக்க படிக்க ஆழ்ந்த கருத்துக்களை, அன்றைய தமிழ் அறிஞர்கள், புலவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.
தொன்மை மிக்க தமிழ் மொழி நமக்கு அள்ளித் தந்தது ஏராளம்.
புலவர்களின் சொல் வன்மையும், கருத்துச் செறிவும், அழகு நடையும் கவிதை வடிவில் நமக்கு விட்டுச் சென்ற முன்னோர்கள், தமிழ் மொழியால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், இதிகாசங்கள் புராணங்கள், காப்பியங்கள், நீதி நெறி விளக்க நூல்கள், வரலாற்று உண்மைகள், தனிப்பாடல்கள் எல்லாம் கவியாய் இருந்ததை, அந்தக்கவி எல்லாம் பொருளுணர்ந்து, எளிதாய் நமக்கு விளங்கும்படி நமக்குத் தந்த தமிழறிஞர்கள் இவர்களை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்கும்போது நம் தமிழ் மொழி மேன்மைகள் பல பெற்றதாய் நாம் உணர்கிறோம்.
பயிர் தழைக்க பொழிவது வான்மழை. உயிர் கலந்த இந்த மனம் த ழைக்கப் பொழிவது கவிதை தேன்மழை.
சிறந்த புலவர்களின் கவிதை, உயிரோட்டம் நிறைந்தவையாக காணப்படும்.
காற்றில் அசையாத குன்று போல என்றும் நின்று அசையாது நம்மையே அசைய வைக்கின்ற கவிதைகள் தமிழ் மொழியில் ஏராளம்.
கவியின் பெருமையை தமிழ் மூதாட்டி ஒளவையார் அருளியதை நாம் இப்போது காண்போம்.
" நூற்றுபத் தாயிரம் பொன் பெறினும் நூற்சீலை நாற்றிங்கள் நாளுக்குள் நைந்து விடும் -- மாற்றலரைப் பொன்றே பொரு தடக்கை போர்வேல் அகலிங்கா! என்றுங் கிழியா தென் பாட்டு.'"
பாட்டின் வலிமையை, ஒளவைப் பாட்டி, அழகு நடையில் சொல்லி உள்ளார். கல்லையும் உருக்கும் சொல்லை உடையது கவி.
நேற்றைய முன் தினம் (11.10.2020) துபாயில், இஸ்லாமிய சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக அனைத்து உலக மொழி கலாச்சாரத் திருவிழா நடைபெற்றது. அதில் மொழி மற்றும் கலை பண்பாட்டை பறைசாற்றும் விதமாக 40 க்கும் மேற்பட்ட நாடுகள் கலாச்சார திருவிழாவில் கலந்து கொண்டன. துபாயில் உள்ள முஸ்லிம்கள் நடுவராக அமைக்கப்பட்ட அந்த திருவிழா கலாச்சாரத்தில், தமிழ் மொழி கலாச்சாரம் முதலிடம் பெற்றது.
தமிழ் மொழியின் தொன்மையை, கலை பண்பாட்டை இன்றைய சமுதாயமும் அறிந்துகொள்ளும் விதமாக, நம் தமிழ்மொழி முதன்மை நிலையை பெற்றுள்ளது, இந்த செய்தியானது உலகிலுள்ள ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தானே.
தமிழ் மொழியின், சிறப்பு உலக மக்கள் யாவரும் அறிய வேண்டும்.
தமிழ் என்ற வார்த்தை சொல்லும் போதே நம்முடைய நாக்கு உயர்ந்து நிற்கும், எப்படி என்றால் நம் தமிழ் மொழி உயர்வதை போல
தமிழ் தமிழ் என்று வேகமாக சொன்னால் அமிழ்து அமிழ்து என்ற சொல்லும் வரும்.
காரணம் நம் தமிழ்மொழிக்கென்று தனிச்சுவை உள்ளது. அதன் சுவைதனை உணர்வோம்.
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே "
என்றுரைத்த திருமூலரின் தமிழ்ப்பற்றை நேசிப்போம்.
தமிழர்களாகிய நாம், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற இலக்கண இலக்கிய நூல்களில் உள்ள செய்யுள்களை ஆழ்ந்து படிப்போம்.
தமிழ் மொழிக்கென தனி அடையாளம் உள்ளதை முதலில் நாம் தெரிந்து கொண்டு, உலக மக்களுக்கு, தமிழ்மொழியின் தரத்தை உணர்த்துவோம்.
இதனால் மேலும் தமிழ்மொழியின் தரத்தையும் உயர்த்துவோம்.
முருக. சண்முகம்
சென்னை
Comments