வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
இந்த வார்த்தைகளைச் சொல்பவர் மேன்மை நிலையில் உள்ளவராகவும், பெருந்தன்மை கொண்டவராகவும் நிச்சயம் இருப்பர்.
இந்த நல்லதொரு வார்த்தைகளை வாழ்த்தாய் பெற்றதற்காக அவரும் மகிழ்வினைப் பெறுவார்.
பொதுவாக அடுத்தவரை வாழ்த்துவது என்பது நல்லதொரு மரபு.
இல்லறம் என்பது நல்லறமாவதுவே.
ஒவ்வொருவர் வாழ்விலும் "இருமனங்கள் இணையும்'' திருமணம் என்பது முக்கியதொரு நிகழ்வாகும்.
அவ்வமயம் கற்றறிந்த சான்றோர்கள் மணமக்களைப் பார்த்து "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ''என்று வாழ்த்துவதும் உண்டு.
இல்லற வாழ்வில் பெற வேண்டிய பதினாறு செல்வங்கள் எவையெவை என்பதை அக்காலத்திலேயே தமிழறிஞர் காளமேகப்புலவர் இனிய பாடலாக வாழ்த்துப்பா சொல்லியிருப்பார்.
" துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம் அதி தானியம் சௌபாக்கியம் போகம் அறிவு அழகு புதிதாம் பெருமை அறம் குலம் நோயின்மை பூண்வயது பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே''
என்பதே அந்த வாழ்த்துப்பா.
பதினாறு செல்வங்களாக உள்ளவை
உடல்நலம், கல்வி, தனம், தானியம், அழகு, புகழ், பெருமை இளமை, அறிவு, நன்மக்கட்பேறு, வலிமை, துணிவு, நீடுவாழ்நாள், வெற்றி , நல்லூழ் மேன்மை தரும் அனுபவம் ஆகிய பதினாறு செல்வங்கள் அனைத்தும் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துவது அந்த பாடலில் உட்பொருளாகும்.
பொதுவாக தமிழ் அறிஞராக காளமேகப்புலவர் பாடலை தமிழுக்கு அக்காலத்திலேயே நமக்கு அருளியது தமிழ்ப் பெற்ற பேறாகும்.
நாம் இனிவரும் காலங்களில் தமிழர்களாகிய நாம் வாழ்த்தும் போது தூய மனதுடன், பொருளுணர்ந்து இல்லற வாழ்வில் இணையும் தம்பதிகளை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என சொல்வோம்.
அந்த வாழ்த்துச் செய்தி அவர்களுக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கட்டும்.
முருக.சண்முகம்
சென்னை
Comments