ஆச்சி மனோரமா
நடிகை மனோரமா நினைவு தினம் இன்று.
கோபிசாந்தா என்னும் இயற்பெயரைக் கொண்ட மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில், தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
வறுமை மற்றும் குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
தன்னுடைய படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார்.
இந்நிலையில், அவரது தாயரிருக்கு ரத்தப்போக்கு ஏற்படட்டதால், தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பராமரித்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
அப்போது, ஒரு நாள் அவருடைய ஊரில் "அந்தமான் காதலி" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தனர். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து, அவர் நாடகத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது நாடக இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை "மனோரமா" என்று மாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோரமா, "நாடக உலக ராணி" என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். இந்நிலையில், "வைரம்" நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் "இன்ப வாழ்வு" என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். அந்தப் படத்தில் மனோரமா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் "ஊமையன் கோட்டை" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விட்டதால், மிகவும் மனமுடைந்து போனார் மனோரமா.
எனினும், கண்ணதாசன், 1958 ஆம் ஆண்டு "மாலையிட்ட மங்கை" என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக திரைத்துறையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகையாகவும், கதாநாயகியாகவும், குணச்சித்தர நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றார் மனோரமா.
இவர் 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகினராலும், ரசிகர்களாலும் "ஆச்சி" என்று அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்து புகழ்பெற்ற நடிகை ஆவார்.
திரையுலகம் தந்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ராமா ராவ் என ஐந்து முதலைமச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.
மனாரமா சுமார் 5,000 க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்மஸ்ரீ விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அத்துடன், தமிழக அரசின் "கலைமாமணி விருது", "புதிய பாதை" திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான "தேசிய விருது", மலேசிய அரசிடம் இருந்து "டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது", கேரளா அரசின் "கலா சாகர் விருது", "சினிமா எக்ஸ்பிரஸ் விருது", சிறந்த குணச்சித்திர நடிகைக்காக "அண்ணா விருது", "என்.எஸ்.கே விருது", "எம்.ஜி.ஆர். விருது", "ஜெயலலிதா விருது" மற்றும் பல முறை "ஃபிலிம்ஃபேர் விருதுகள்" என ஏராளமான விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.
ஜில் ஜில் ரமாமணியாக வந்து இன்றளவும் சிரிக்க வைத்தவர் அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்தியராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் மனோரமா. நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.
நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்.
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் நிற்பவை. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் தாத்தா. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு என்று எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.
குணச்சித்திர வேடங்களிலும் அவர் கோலோச்சினார்.
பொம்மலாட்டம் படத்தில் வி. குமாரின் இசையில் வா... வாத்யாரே வூட்டாண்ட... நீ வராங்காட்டினா வுடமாட்டேன் என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல் ‘கருந்தேள் கண் ணாயிரம்’ படத்தில், பூந்தமல் லியிலே ‘ஒரு பொண்ணு பின் னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே...’ என்று அவர் பாடிய பாடல் பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாமே என்ற பாடல் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன் என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.
ஆயிரம் படங்களைத் தாண்டிய ஆச்சி
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு அதிகம். திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தபோதும் அவர் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்தவர். அவர் நடித்த மேடை நாடகங்களின் எண்ணிக்கை 5000 வரை இருக்கலாம் என்றும் சில புள்ளி விவரங்கள் வெளியாகிவுள்ளன.
தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இனம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு. ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியாக பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை.
நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதொரு துறையாக வர்ணிக் கப்படும் தமிழ்த்திரைப்படத்துறையில் அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும்.
Comments