நடிப்பை மட்டும் பாருடா
நடிகர் சூர்யாவை கண்டித்து கோவையில் இந்து இளைஞர் முன்னணியினர் போராட்டம்
நீட் தேர்வை எதிர்க்கும் நடிகர் சூர்யாவை கண்டித்து கோவையில் இந்து இளைஞர் முன்னணியினர் போராட்டம்
நீட் தேர்வுகளுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் நடிகர் சூர்யா, நீட் தேர்வுகளைக் கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்ட்டார். அதில், நீட் தேர்வுகள் என்பது மனுநீதித் தேர்வு; கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவைப் பொசுக்கக் கூடியதாக இருக்கிறது என சாடியிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கையில் நீதித்துறை குறித்த விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவை இல்லை என கூறியிருந்தார்.
இதனிடையே திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மன், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவையில் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். காலில் மிதிக்கும் போராட்டம் கோவை காந்திப்பார்க் பகுதியில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் சூர்யாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் நிர்வாக குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களிடம் தவறான அச்சம் அப்போது செய்தியாளர்களிடம் சண்முகம் கூறியதாவது: நீட் தேர்வை மையமாக வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறாங்க.. நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாக நீட் ஒரு பூதம், பேய், பிசாசுங்கிற மாதிரி மாணவர்களிடம் ஒரு தவறான அச்சத்தை விதைச்சு அதன் மூலம் மாணவர்கள் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நீட் எழுதினால் பாஸ் பண்ண முடியாதோங்கிற விரக்தியை ஏற்படுத்தி மாணவர்களின் தற்கொலைக்கு ஒரு சில ஊடகங்கள் துணை போயிருக்கின்றன
இந்த அரசியல்வாதிகள் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் ஊதுகுழலாக செயல்படுகிறாங்க. நடிகர் சூர்யா மாதிரியான ஆட்கள் நீட் வந்து மாணவர்களுக்கு ஆகாதுங்கிற மாதிரி கொரோனா காலகட்டத்துல தேவையில்லாத தேர்வுன்னு சொல்லி நீட்டுக்கு வாழ்த்து சொல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது என சொல்கிறார் சூர்யா.
நீட் ஒரு மனுநீதித் தேர்வு- அநீதித் தேர்வு என ஒரு தப்பான எண்ணத்தை, பிரசாரத்தை சூர்யா மாணவர்கள் மத்தியில் முன்வைக்கிறார். இயலாமையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக இவருடைய பேட்டிகள், அறிக்கைகள் இருக்கின்றன. அதனைக் கண்டித்துதான் தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய இந்து இளைஞர் முன்னணியின் மாணவர்கள் தன்னெழுச்சியாக இன்று போராட்டம் நடத்தினர் என்றனர். சூர்யாவுக்கு எதிராக முழக்கம் இந்தப் போராட்டத்தின் போது நடிகர் சூர்யாவை ஒருமையில் விமர்சித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சூர்யா.... வேலையை மட்டும் பாருடா சூர்யா என முழக்கங்கள் எழுப்பினர். அத்துடன் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Comments