கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
தமிழ் மொழியில், சிறந்த சொற்பொழிவு, வழக்காடு மன்றம், பட்டிமன்றம் என பல்வேறு நிலைகளில், இன்றும் தமிழுக்கு அரும்பணி செய்து வருபவர் இலங்கையைச் சேர்ந்த "கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்" அவர்கள்,
.
இலங்கை நல்லூரில் பிறந்து, பாரம்பரிய குருகுலக் கல்வி பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்ற இலங்கை ஜெயராஜ் அவர்கள் 1980 ஆம் ஆண்டு, தனது 23வது வயதில் அகில இலங்கை கம்பன் கழகத்தை நிறுவினார்.
1995 ஆம் ஆண்டு, கொழும்பு கம்பன் கழகத்தை தோற்றுவிட்டு தமிழின் இயல், இசை, நாடக வடிவமைப்பிற்கு மெருகூட்டி கம்பன் விழா, இசை வேள்வி. நாடக வேள்வி என ஆண்டுதோறும் நடத்தி தமிழுக்கு அரும்பணி செய்து வருகிறார். திருக்குறள் மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள் இடைவிடாத நடத்தி ஒவ்வொரு மணித்துளியும் தன் மனம், மொழி, மெய்களால் தமிழை வணங்கி கொண்டிருக்கும் தமிழர். இவர் நடத்தி வரும், அரும் தமிழ்ப் பணியால், உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து, மாணவர்கள் வந்து கற்று தமிழ்மணத்தை, உலகமெல்லாம் அறியச் செய்கின்றனர்.
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே"
என்னும் திருமூலரின் சொற்களுக்கு ஏற்ப, தமிழ் மொழி மீது பற்று வைத்து தமிழுக்கு தொண்டு செய்து வரும் "கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள்'" தமிழ் சேவை உலக தமிழ் மக்களுக்கெல்லாம் பேரின்பம் தரும் செயலாகும்.
அந்தக் காலத்தில், திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின், சொற்பொழிவினைக் கேட்டு, எந்த அளவுக்கு பேரின்பம் அடைந்தோமோ அந்த அளவுக்கு இலங்கை ஜெயராஜ் அவர்களின் ஆழம் பொதிந்த கருத்துக்கள் கேட்டு மெய்மறந்து பேரின்பம் பெறுவோம்.
ஒவ்வொரு ஆண்டும். சென்னை கம்பன் கழகம், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள திருமதி ராஜேஸ்வரி மெய்யப்பன் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 15 தேதி ஒட்டிய மூன்று நாட்கள் கம்பராமாயணத்தில் பல்வேறு பாத்திரப் படைப்புகளை, மையப்படுத்தி கவியரங்கம், சொற்பொழிவு, வழக்காடு மன்றம் மட்டும் பட்டிமன்றம், கம்பராமாயணத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவித்துவத்தின் மேன்மை என பல்வேறு தலைப்புகளில் தமிழ் அறிஞர்கள், அவரவர்களின் தனித்திறமையை முன்னிறுத்தி நடைபெறும் அற்புதமான கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா.
நான் கடந்த 5 ஆண்டுகளாக, இந்த இலக்கிய கம்பன் விழாவில் கலந்துகொண்டு பேருவகை அடைந்தவன்..
இந்த கம்பன் விழாவின், இரண்டு நாட்கள் இலங்கை ஜெயராஜ் அவர்களின் வழக்காடு மன்றம், பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெறும்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் பேசும் தமிழ் மொழியின் நடை, கம்பராமாயணத்தில் கம்பனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரங்களின் நுணுக்கம், எல்லாவற்றையும் தன்னுள் வாங்கி அழகு தமிழில், தெளிவாகவும், கேட்பவர் மனதுக்கு இதமாக அமையும். இடையிடையே சொல்லும் நகைச்சுவை கலந்த பேச்சு நம்மை மகிழ வைக்கும்.
கம்பவரிதி இலங்கை ஜெயராஜ், கம்பராமாயணம் மட்டுமல்ல, தேவாரம் திருவாசகம், பெரியபுராணம், வாழ்வியல் தத்துவங்கள், திருக்குறளில் இருக்கும் அதிகாரங்களின் தலைப்பு,, இப்படி பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களின் கருத்துக்களை இலக்கண முறைப்படி கற்றுத் தெளிந்து அவர் படைத்திடும் சொல்லாற்றல், நடைமுறை சூழலின் வாழ்க்கையையும் மேற்கோள்காட்டி தமிழால் ஈர்த்து கேட்கும் செவிகளுக்கு தன்னை மறக்கும் நிலைச்செய்யும் ஆற்றல் பெற்ற சைவச் சித்தாந்த பெருமகனார் இலங்கை ஜெயராஜ் அவர்கள்.
அவர், ஒரு முறை இலங்கையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய அப்போது, இலங்கையில் போர் புரிந்த நேரம்,
வானத்தின் மேலே திடீரென்று விமானங்கள் பறந்து செல்லுமாம், கீழே சொற்பொழிவாற்றும் நேரத்தில் அந்த அரங்கத்தில் விளக்குகள் அனைத்தும் விடுவார்களாம். எல்லோரும் அமைதியாக இருப்பார்களாம். கொஞ்ச நேரம் கழித்து விமானங்கள் சென்ற பிறகு மீண்டும் விளக்குகள் போடப்பட்டு சொற்பொழிவு தொடர்ந்து நடக்குமாம்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, இக்கட்டான சூழ்நிலைக் காலங்களிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியவர். பல்வேறு அபாய கட்டங்களையும் தாண்டி பெருமை மிக்கவர். இன்றும் தமிழ் மொழி மீது பற்று வைத்து சிறப்புமிக்க கருத்துக்களை நயம்பட உரைத்து நமக்கு அளித்து வருகிறார்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்னும் பல காலம் தமிழ்த் தொண்டாற்ற வேண்டும். அவரின் தமிழை நாமும் செவிகளில் கேட்டு இன்புற வேண்டும்.
முருக.சண்முகம்
சென்னை
Comments