வழக்கறிஞர் இல்லாமல் *நீதிமன்றத்தில்இல்லாமல் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது குறித்த விவரங்கள்
வழக்கறிஞர் இல்லாமல் *நீதிமன்றத்தில்இல்லாமல் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி ? (Party in Person) ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தின் வழக்கு தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கில் நியாம் இருக்கிறது என்று நீதிமன்றம் நம்பும் வகையில் இருக்க வேண்டும். ஒரு குற்றம் எங்கு நடந்துள்ளதோ அந்தக் குற்றவியல் மன்றத்தில்தான் புகார் செய்ய முடியும். எனவே. குற்றம் எந்த எல்லைக்குள் நடந்துள்ளதோ அங்கு வழக்கு தாக்கல் செய்ய முடியும். குற்றவியல் நீதிமன்றங்கள் பல உள்ளன. ஓரே ஊரில் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும். இரண்டாவது வகுப்பு நீதித்துறை நடுவர் மன்றம் என்றும் கூட இருக்கலாம். குற்ற அளவின் தன்மையைப் பொருத்து எங்கே புகார் செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். தவறான நீதிமன்றத்தில் மனு கொடுத்தாலும் அதனால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. மனு மறுக்கப்பட்டு திருப்பியளிக்கப்படும். ஒரே நேரத்தில் ஏன் திருத்தப்பட்டது என்பதற்கான காரணம் எழுதப்பட்டிருக்கும் அதைத் தெரிந்து கொண்டு உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். மனு தயார் செய்யும் போது தலைப்பில் நீதித்துறை நடுவர் மன்றம் என மனு எழுதி அதன் கீழே ஊரின் பெயரை எழுத வேண்டும். அதற்குக் கீழே மையத்தில் ஆண்டடுப்பட்டிகை வழக்கு எண் அல்லது சி.சி.எண்.. என்று எழுதி கொஞ்சம் இடம் விட்டு அதாவது சி.சி. எண்…….2019 என்று வருடத்தைக் குறிப்பிட வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டதும் ஒரு எண்....... வழங்கப்படும். அந்த எண்ணை எழுதுவதற்கு வசதியாகவே இந்த இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்து பெயர் – தந்தையார் பெயர்- சுமாரான வயது முகவரியை இடது பக்கத்தில் எழுதி. மனுதாரர் –குற்றப்புகார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழே தமிழில் எழுதுவதாக இருந்தால் தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று எழுத வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் Party in Person என்று எழுதவேண்டும். இது எழுதப் படாவிட்டாலும் பரவாயில்லை. எழுதப்பட்டிருந்தால் மனுதாரர் வழக்கறிஞர் இல்லாமல் வாதாடப் போகிறார் என்பதை நீதிமன்றம் முதலிலேயே புரிந்து கொள்ளும். அடுத்து இடது பக்கத்தில் எதிர்மனுதாரர்களின் பெயர்- சுமாரன வயது – முகவரி எழுதவேண்டும். எதிர்மனுதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்டு இருந்தால் வரிசையாக எழுத வேண்டும். எழுதி வலது பக்கத்தில் எதிர்மனுதாரர்கள் என்று குறிப்பிடவேண்டும். குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய கட்டணமாக 2 ரூபாய்க்குக் கோர்ட் பீ ஸ்டாம்ப் வாங்கி ஓரத்தில் ஓட்டிவிடவேண்டும். இந்த ஸ்டாம்ப் ஒட்டுவதற்கு வசதியாக இடது பக்கம் மார்ஜினில் இடம்விட்டு மனு தயார் செய்ய வேண்டும். இந்த ஸ்டாம்ப் இடது பக்கத்தில்தான் ஒட்ட வேண்டும். என்பதில்லை தலைப்பிலோ வலது பக்கத்திலோ கீழே உள்ள மார்ஜின் பகுதியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். குற்றத்துறை நடுவர் நதீமன்றத்தில் இதுபோல் தனியார் புகார் கொடுப்பதற்கு குற்ற விசாரணை முறைச் சட்டம் 200-ல் குறிப்படப்பட்டு உள்ளது. எனவே கீழே மையத்தில் கு.வி.மு 200 இன் கீழ் மனு என்று குறிப்பிட்டு அடிக்கோடு இடவேண்டும். ஒரு குற்றம் பற்றி சரியாகப் புலனாகாத நிலையில் கு.வி.மு.ச 190(1)(அ)-ன் கீழும் இந்த மனுவை ஒரு முறையீட்டாக தாக்கல் செய்யலாம். பொது சுகாதாரக் கேடுகள். பொது வழிக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதியைக் குலைத்தல் போன்ற பொது நல வழக்காக இருந்தால் கு.வி.மு.ச. 133-ன் கீழ் முறையீடு என்று குறிப்பிடடு தாக்கல் செய்யலாம். புகாராக இல்லாமல் ஒரு சம்பவம் பற்றி – நமக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் பற்றி – தாக்கல் செய்வதாக இருந்தால் கு.வி.மு.ச. 2(ஈ) யின் கீழ் முறையீடு என்று குறிப்பிடவேண்டும். இந்தப் பிரிவின் கீழ் அரசு அதிகாரிகள்மீதும் முறையீடு தரலாம். கு.வி.மு.ச. 197-ன் கீழ் அரசிடம் அனுமதி பெறத் தேவை இல்லை. உதாரணமாக தாசில்தாரர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது போன்ற மேல் முறையீட்டையும் தரலாம். அடுத்து புகாரின் தன்மையைச் சுருக்கமாகப் பாரா பாராவாக எழுத வேண்டும். 1.2.3 என பத்திகளுக்கு வரிசை எண் குறிப்பிடுவது நல்லது. கடைசியில் எனவே எதிர்மனுதார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது என்று முடிக்க வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவில் (SECTION) இந்தக் குற்றம் அடங்கும் என்ற விபரம் தெரிவிக்கலாம். தெரிவிக்காமலும் விட்டுவிடலாம். தெரிவித்தால் மனுதார் சட்டம் படிக்கிறார் என்ற விபரத்தை நடுவர் புரிந்து கொண்டு நியாயமாக விசாரரணயை நடத்த எண்ணுவார். அய்யா வணக்கம் என்று சாதாரண கடிதத்தில் எழுதுவது போல எந்த இடத்திலும் எழுதத் தேவையில்லை. கடைசியில் வலது பக்கம் கையெழுத்து செய்து – மனுதார் என்று எழுத வேண்டும். புகாரை இரண்டு பக்கமும் எழுதலாம். புகார் எழுதும் போது இரண்டு கார்பன் பேப்பர் வைத்து எழுதி அடிக்கட்டையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஜெராக்ஸ் எடுத்தும் கொள்ளலாம். எதிர்மனுதாரர்க்காக ஒரு நகல் வழங்கவேண்டும் என்பதால் ஒரிஜினல் மனுவுடன் ஒரு நகலும் சேர்த்துக் வைக்க வேண்டும். பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்படும்போது டைப் செய்து தாக்கல் செய்வதே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் டைப் செய்துதான் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப் படவில்லை. இது சிவில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். கு.வி.மு.ச. 2(ஈ)யின் கீழ் வாயினால்கூட முறையீட்டை தாக்கல் செய்யலாம் என்பதே விதி. எனவே. எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் வசதி இல்லாதவர்களும் நீதிமன்றத்தில் சென்று வாயினாலேயே தங்கள் முறையீட்டை அளிக்கமுடியும். புகார் மனுவை டைப் செய்யும்போது இரண்டு பிரதி தயார் செய்ய வேண்டும். முதல் பிரதி ஒரிஜினல் புளு திக் பேப்பரிலும் (கேங்கர் பேப்பர்) இரண்டாவது – மூன்றாவது பிரதி வெள்ளைப் பேப்பரிலும் இருக்கலாம். முதல் இரண்டு பிரதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். கம்ப்யூட்ரில் டைப் செய்தால் ஜெராக்ஸ் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். புகார் மனுவானது வழக்கு முடியும் வரையில் பாதுகாப்பட வேண்டியுள்ளதால் இது போல் திக் பேப்பரில் இருந்தால் பாதுகாப்பாகவே இருக்கும் என்பதால் இதை நடைமுறையில் பின்பற்றுவதாகத் தெரிகிறது. ஒரு பிரதியை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். மனுவில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்வதற்காக இது தேவைப்படும். வழக்கு விசாரணையில் எதிர் மனுதாரர் பலர் இருந்தால் இதன் நகல் தரவேண்டியிருக்கும். இதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தோ. மீண்டும் தட்டச்சு செய்தோ வழங்கலாம். மனுவை இரண்டாக மடித்தால் பின்பக்கம் வெறுமனே இருக்கும். பாதியாக மடித்து அதன் வலப்பக்கத்தில் மேலே நீதிமன்றத்தின் பெயரும். ஊரின் பெயரும் கீழே எழுத வேண்டும். அதற்கடுத்து (C.C.No…./2019) என்று எழுதவேண்டும். இது காலண்டர் கேஸ் எண். (CALENDER CASE NUMBER) என்பதன் சுருக்கமாகும். தமிழில் ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்……../2019 என்றும் குறிப்பிடலாம். சற்று கீழே மனுதாரின் பெயர் எழுதி-மனுதார் என்று எழுத வேண்டும். அதற்குக் கீழ் கொஞ்சம் இடம்விட்டு எதிர்மனுதாரின் எதிர்மனுதாரர்கள் பலர் இருந்தால் முதல் எதிர் மனுதாரின் பெயரைமட்டும் எழுதி மற்றும் பிறர் என்று குறிப்பிட்டால் போதுமானது. மையப்பகுதியில் குற்றவிசாரணை முறைச்சட்டம் அல்லது கு.வி.மு.ச. 200கீழ் மனு என்று குறிப்பிட்டு மேலும் கீழும் கோடிட்டுத் தனியாகக் காட்ட வேண்டும். அல்லது நீங்கள் எந்தப் பிரிவின் கீழ் உள்ளே குறிப்பிட்டுள்ளீர்களோ அதை இங்கே குறிப்பிட வேண்டும். கடைசியில் மனுதாரின் பெயரை எழுதி மனுதார்- தன் வழக்கில் தானே ஆஜராகிறார் என்று எழுத வேண்டும். இதுவே தயாரிக்கப்பட்ட மனுவாகும். இந்த மனுவுடன் உரிய சான்றாவணங்கள் இருந்தால் கூடிய மட்டும் ஒரிஜினலோ அல்லது ஜெராக்ஸ் காப்பியோ இணைக்க வேண்டும். செய்திகளை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி* *உச்ச நீதிமன்றம், புது டெல்லி* |
Comments