நெல்மணிகள்
நெல்மணிகளுக்கு
ஒரு கவிதை
( இன்றைய இலக்கியச்சோலையில் )
இயற்கை நமக்கு எண்ணற்ற பொருள்களை படைத்து அருளுகிறது.
தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் அரிசியை முக்கிய உணவாக கொண்டு வாழ்கிறோம்.
உழவனின் கலப்பை கொண்டு நாற்று நட்டு, களைப் பறித்து அறுவடை செய்து தயாராகும் நெல்லில் ஒரு உழவனின் உழைப்பு தெரியும்.
உழவர் திருநாளாம், தை மாதம் முதல் நாளில் தைப்பொங்கல் அன்று, மண்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, கதிரவனுக்கு படையலிட்டு ஆண்டுதோறும் கொண்டாடுவது தமிழர்களின் மரபு.
நெல், நமக்கு அத்தியாவசிய பொருளாக இருப்பது.
அந்த நெல்மணி
நம் உழைப்பால் கிடைக்கும் வருவாய் மூலம் பசியைத் தீர்க்க உணவாய் வருகிறது.
நெல்மணிகள்
"வருவாய் வாய்க்கு உணவாய்".
உழவனே உன் முகம் பார்க்க உதயத்தே எழுந்திடுவாய்
உழுதிடும் கலப்பையை உள் வாங்கி எழுந்திடுவாய்
நல்ல விதையை நீர் நாற்றங்கால் அழுந்திடுவாய்
நாளும் வளர்ந்திடவே நன்னீரின் துணை பெறுவாய்
விரைந்து பலன் தரவே வேறிடத்தில் குடிபுகுவாய்
வேண்டாத கலைக்குப்பின் வேர் விட்டு அடி தொடுவாய்
பசுமையாய் வளர்ந்தே பலர் மனதை ஈர்த்திடுவாய்
பதமான கதிர் ஈந்து பாங்குடனே காத்திடுவாய்
உதிரி மணியாய் பூமியில் முத்தமிட்டே வணங்கிடுவாய்
உழைத்திட்ட உழவனை முன்னேற்ற இணங்கிடுவாய்
அதிகமாய் விளைந்து ஆலைக்குச் சென்றிடுவாய்
அரும்பாடு பட்டவரை அகமகிழ செய்திடுவாய்
அரிசியாய் உருமாறி அரும்பசியை ஆற்றிடுவாய்
ஆண்டி முதல் அதிபதி வரை அனைவருக்கும் விருந்திடு வாய்
பாரினைக் காத்து தினம் பசி நீக்க வந்திடுவாய்
பஞ்சம் ஒன்றும் வாராத பணிவாழ்வு தந்திடுவாய்.
முருக. சண்முகம்
சென்னை
Comments