அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
( பாரதி நினைவு நாள் கவிதை )
நாட்காட்டி சொல்கிறது
இன்றுனது நினைவு நாளென
உண்மையில் உன்னை
நினைக்காத நாளேது?
மொழியைப் பதுப்பித்தாய்
எங்கள் வழியைப் புதுப்பித்தாய்
சிந்தை புதுப்பித்தாய்
எங்கள் சிறகுகள் புதுப்பித்தாய்
தமிழ் வானம் புதுப்பித்தாய்
தமிழர் ஞானம்
புதுப்பித்தாய்
உலகின் சாளரம் திறந்தாய்
எம்மைப்
புதிய உயிர்களாய்ச்
சமைத்தாய்
கொடுமை கண்டு கொதித்தாய்
எழுத்தில் தீயின் விதைகளை விதைத்தாய்
எழுதி எழுதி எரிந்தாய்
எங்கள் இருளை எல்லாம் எரித்தாய்
புதிய கோடாங்கியே
இன்றும் நீ புதிதாய் பிறந்தாய்
வணங்குகிறேன்
நீ மீசை முளைத்த
தமிழ்த் தாய்.
*
- பிருந்தா சாரதி.
Comments