தேசிய கொடி முகமூடிகள்
எதிர்வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக கோலகலமாக மக்கள் கொண்டாடும் சுதந்திர தினம் இம்முறை கொரோனா தொற்று காரணமாக ஆடம்பரங்களின்றி கொண்டாடப்பட உள்ளது. ராணுவ அணிவகுப்புகள் உள்ளிட்டவை வழக்கம் போல நடைபெறும் என்றாலும் அவற்றை கண்டுகளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கியமான சிலர் கலந்து கொள்ளும் நிகழ்வாகவே அது இருக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக சுதந்திர தின நாளில் மக்கள் தேசிய கொடி அட்டையை சட்டைகளில் பதிந்துக் கொண்டு வலம் வருவர். தற்போது கொரோனா பாதிப்புகள் உள்ளதால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடி வண்ண முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
எப்போதும் சுதந்திர தினத்திற்கு முன்பாக தேசிய கொடிகள், மூவர்ண தோரணங்களுக்கான ஆர்டர்கள் மற்றும் விற்பனை அதிகரித்து காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாதது, மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் என பல காரணங்களால் மூவர்ண கொடிகளுக்கான ஆர்டர்கள் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது .
எனினும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மக்கள் அத்தியாவசிய பொருளாய் பயன்படுத்தும் முகக்கவசங்களில் மூவர்ண கொடியை அச்சிட்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆரம்ப நிலையில் முகக்கவசங்களை மக்களிடையே பிரபலப்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் நடிகர்கள் உருவம் அச்சிட்ட முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட முக்ககவசங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் இத்தகைய முகக்கவசங்கள் வேகமாக விற்பனையாகி வருவதால் ஆர்டர்களும் குவிந்து வருவதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Comments