பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை
உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளையை தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் இடைக்காலமாக நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட இருந்தது. இதை எதிர்த்து அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் எல். செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது 1144 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக கூறி தேர்தல் நடத்த முயற்சி நடந்து வருகிறது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கமலநாதன், ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி, தேர்தலில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தேர்தல் அறிவிப் பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தர விட்டார். மேலும் இதுகுறித்து பதிலளிக்குமாறு அறக்கட்டளையின் தற்காலிக நிர்வாகி மற்றும் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments