யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர் தோல்வி; விடா முயற்சியால் தடைகளைத் தாண்டி சாதித்த பெண்கள்
யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர் தோல்வி; விடா முயற்சியால் தடைகளைத் தாண்டி சாதித்த பெண்கள்தொடர் 1
பூர்ண சுந்தரி - மல்லிகா - தியா யூபிஎஸ்சி தேர்வில் தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியை தழுவினாலும், தங்களின் விடா முயற்சியாலும் தன்னம்பிக்கை மற்றும் குடும்பம் அளித்த ஊக்கத்தாலும், அனைத்துத் தடைகளையும் கடந்து, நான்காவது முறை வெற்றி கண்டுள்ள 3 இளம் பெண்கள், தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். "விளிம்பு நிலை மக்களுக்காக பணியாற்றுவேன்" - மல்லிகா நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் உள்ள ஓர் சிறிய பழங்குடி கிராமம் கக்குலா. படுகர் பழங்குடியின மக்கள் வசிக்கும் அந்த கிராமத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார், 25 வயதான மல்லிகா. 'கல்விதான் வளர்ச்சியைத் தரும்', என்ற பெற்றோரின் வார்த்தைகள் தான், படுகர் பழங்குடி இன மாணவியான மல்லிகாவை சாதனை படைக்க வைத்துள்ளது. மல்லிகா யூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர்ச்சியாக முதல்நிலை தேர்விலேயே தோல்வியை சந்தித்தாலும், விடா முயற்சியால் பயின்று தன் நான்காவது முயற்சியில் இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்று யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளார். மல்லிகாவிடம் பேசினோம். "அப்பா சுந்தரன், சிறிய அளவில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அம்மா சித்ரா தேவி, கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக இருக்க வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் கூறுவார்கள். படிப்பு ஒன்றுதான் வருங்காலத்தில் கைகொடுக்கும் என்பதுதான் அவர்கள் எனக்கு சொல்லி வந்தது. அம்மா - அப்பாவின் ஊக்கத்தால் தான் படிக்க முடிந்தது. அவர்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் என் படிப்புக்காகவும் யூபிஎஸ்சி பயிற்சிக்காகவும் செலவழித்தனர். வசதியான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை. அவர்களின் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு எனக்காக எல்லாமே செய்தனர். கல்வியில் எனக்கு எல்லாம் சிறப்பானதாக கிடைக்க வேண்டும் என நினைத்தனர். அவர்கள் எனக்கு உதவியாக இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. 'நீ பெண், இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று எனக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அப்பாவுக்கு 66 வயது, அம்மாவுக்கு 60 வயது. இந்த வயதில்தான் அவர்களுக்கு ஒரு ஓய்வான நேரத்தை என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது. 8-ம் வகுப்பு வரை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியிலும் அதற்கு பிறகு குன்னூரில் உள்ள கான்வென்ட் பள்ளியிலும் பயின்றேன். 10-ம் வகுப்பில் 473 மதிப்பெண்கள் பெற்றேன். 12-ம் வகுப்பில் 1140 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு, அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோ டெக்னாலஜி படித்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் நிறைய பேர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்கள் பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்கள் கல்லூரிகளுக்கு வந்து ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவார்கள். அப்போதுதான் எனக்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கல்லூரியிலேயே வகுப்புகள் முடிந்தவுடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். நகரங்களில் உள்ள வசதிகள் எனக்குக் கிடைத்ததில்லை. கிராமங்களில் உள்ள வசதிகளை வைத்துத்தான் படித்தேன். 2016-ல் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு யூபிஎஸ்சி தேர்வுக்கு முழுமையாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். சென்னையில் தான் நான்கு ஆண்டுகள் படித்தேன். மனித நேயம் ஐஏஎஸ் அகாடமி மற்றும் சந்தோஷ் சபரி இன்ஸ்டிட்யூட்டில் படித்தேன். மூன்று முறை என்னால் முதல்நிலை தேர்விலேயே வெற்றியடைய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். மிகவும் கஷ்டமானதாகத்தான் இருக்கும். ஆனால், அதனையும் மீறி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பெற்றோரும் இதனை தோல்வியாக எடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளித்தனர்" என்கிறார், மல்லிகா. அகில இந்திய அளவில் 621-வது ரேங்க் பெற்றுள்ள மல்லிகா, மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் யூபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என கூறுகிறார். தற்போது தனக்கு ஐ.ஆர்.எஸ். பணி கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கும் மல்லிகா, குடிமைப் பணி அதிகாரியாக தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். "யூபிஎஸ்சி பயிற்சியின் போதுதான் எனக்கு சமூகம் மீதான புரிதல் அதிகரித்தது. ஒரு அதிகாரியால் நாட்டுக்கு எவ்வளவு பங்கு செலுத்த முடியும் என்பது புரிந்தது. யூபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தனிப்பட்ட முறையில் என்னை வளர்த்தெடுத்தது. நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தனித்துவமான அதிகாரியாக இருக்க வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறிப்பாக வளர்ச்சி சென்றடையாத மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக உழைப்பேன். இணைய வசதி, திறன் மேம்பாடு உள்ளிட்டவை பழங்குடி கிராமங்களில் அவ்வளவாக கிடைக்காது. அப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கான முன்மாதிரியாக நான் இருப்பேன். யூபிஎஸ்சி தேர்வெழுத விரும்புபவர்களுக்கு அரசு சார்பாக நிறைய உதவிகள் செய்யப்படுகின்றன. அரசின் பயிற்சி மையம் சென்னையில் உள்ளது. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் இலவச பயிற்சி மற்றும் இலவச தங்கும் வசதிகள் அங்கு கிடைக்கின்றன. தரமான உணவு வழங்கப்படுகின்றது. நல்ல நூலகம் இருக்கின்றது. இதனை மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன். நம் மாநிலத்தில் இந்த வசதிகள் கிடைக்கின்றன. நாம் வெற்றி பெற வேண்டும் என மாநில அரசு ஊக்கப்படுத்துகிறது. நன்றாக படிப்பவர்கள் தான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. விடா முயற்சி வேண்டும். நமக்கு நாமே ஊக்கமளித்துக்கொள்ள வேண்டும்" என மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறார், மல்லிகா. |
Comments