கொல்லும் கொரோனா வெல்லும் மனவலிமை
கொல்லும் கொரோனா வெல்லும் மனவலிமை (மனித வலிமை)
கொல்லும் கொரோனாவின் தீயசக்தியை இப்போதே திருத்தி அமைப்போம் வா மனித இனமே!
கொரோனா என்றதுமே நெஞ்சு படபபடக்கிறது. திகில், கலக்கம், திடுக்கிட வைக்கும் அச்சம் நம் மனதைப் பிளக்கிறது. திரும்பின திசையெல்லாம் கொரோனா. கனவிலும் கொரோனா, வெளி உலகிலும் கொரோனா. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வானொலி, தொலைக்காட்சிச் செய்திகள், நண்பர் வட்டம், சொந்த பந்தம் எங்கும் கொரோனா.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு வலிமையும் உத்வேகமும் உண்டு என்பது அறிவியல் நமக்குச் சொல்லும் உண்மை. அது மூளைக்குள் உட்புகுந்து அதற்கேற்ற வேதிமாற்றத்தை உண்டுபண்ணி, அதன்படி தான் நாம் சந்தோஷப்படுவதோ, கவலையடைவதோ, கலவரப்படுவதோ, கொந்தளிப்பதோ அமைகிறது. இப்பொழுது புரிகிறதா, தினம் தினம் நாம் எதனால் ஆட்கொள்ளப்படுகிறோம் என்று? எனவே கொரோனா என்ற வார்த்தையின் சக்தியையும், உத்வேகத்தையும் வென்று வேறு விதி அமைப்போம்.
கொரோனா என்பதன் உண்மையான அர்;த்தம் கிரீடம் என்பதாகும். இந்தக் கிருமி கூர்முனை முட்களைக் கொண்டிருப்பதால் அதற்குக் கொரோனா என்று பெயர். ஆனால் காற்றுமண்டலம் மற்றும் சூரியனின் வெளிவட்டத்திற்கும் கொரோனா என்று தான் பெயர் என்பது உங்களுக்குத் தெரியுமா? நட்சத்திரக் கொரோனா. அற்புதமான தங்கவளையம் போன்ற அதனை நாம் ஒருபோதும் காணமுடியாது.
ஏனென்றால் உன்னதமான சூரிய வெளிச்சத்தில் தங்க வளைய வெளிச்சம் மங்கி மறைந்திருக்கும். ஆனால் சூரியகிரகணத்தை அடையும் போது சூரியன் இருளடைந்து மனம்கவரும் இந்த நட்சத்திரத் தங்க வளையம் கண்டு நாம் மனம் குளிரலாம். இதே நிலையில் தான் மனித இனம் இன்று தவித்துக் கிடக்கிறது.
காரிருள் நம்மைச் சுற்றி இருக்க, நாம் நினைத்தால் மாத்திரமே ஒரு பெரும் பிரகாசத்தை நாம் காண முடியும். நம்முடைய பொய்யான வாழ்க்கை முறையில் நாம் தடவித் திரிகிறோம். அவசர உலகம், மாடமாளிகை, கூடகோபுரம், வங்கிக்கணக்கில் உள்ள பெரும் சேமிப்பு, கார், உல்லாச வாழ்க்கை இவைகளில் மயங்கிக் கிறங்குகிறோம். போலியான கதாநாயகன், கதாநாயகிகளைப்; போற்றிக் கொண்டாடுகிறோம். உண்மையானதை மேன்மைப்படுத்தி பாராட்ட என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? நம் விவசாயிகள், சுகாதாரக் காவலர்கள், நம் மருத்துவர்கள், செவிலியர்கள், சான்றோர்கள் மற்றும் நம் ஆன்றோர்களை ஏற்றிக் கொண்டாட வேண்டும்.
கொடும் பயங்கரத்தில் இந்தக் கிருமி நம்மை ஆழ்த்தினாலும், வாழ்க்கையின் நிஜங்களைக் காணவும் இது வழி காட்டியாய் அமைந்துவிட்டது. நிஜம் என்ன? உள்ளக் கனிவு, மனிதர் மேல் பிரியம், தாராளம், சமத்துவம், ஒருமைப்பாடு இவைதவிர வேறில்லை. எல்லோரும் ஒரே இனம் தான். அன்பும், எளிமையும், ஒருவருக்கொருவர் துணை என்ற உண்மை நிலையை அடைந்திருக்கிறோம்.
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். யாவும் மாறும். எல்லாம் சரியாகும் உன்று ஒருவருக்கொருவர் வாழ்த்த வேண்டும். வாழ்வின் சிறு சிறு துளிகளையும் கொண்டாட வேண்டும். அடுத்த முறை கொரோனா என்று சொல்லும் போது, உங்கள் உண்மை வெளிச்சத்தையும், அறிவத்திறனையும் ஏற்றிப் போற்றுங்கள். அது வேறொன்றுமில்லை, ஓருமைப்பாடு, உள்ளக் கனிவு மற்றும் மானிடப் பிரியம் என்பதே!
கொல்வோம் வா, கொரோனாவை வெல்வோம் வா!
செல்வகுமாரி நடராஜன்- மும்பை
வழக்கறிஞர்
Comments