புத்தர் பாதை காட்டுவோம்
சுதந்திர தினம்
புத்தர் பாதை காட்டுவோம்
******
- காந்தி என்ற கருணை மூர்த்தி
கண்ட கனவை எண்ணுவோம்
சாந்தி என்றும் சகத்தை ஆள
சந்தை முறையைத் தள்ளுவோம்
ஏந்தி நின்று எடுத்த தல்ல
எங்கள் வழியே சத்தியம்
பந்த பாசம் பகுத்த நாடு
பக்தி மிகுந்த பாரதம்.
- அன்னை பூமி ஆளு வோர்கள்
அறத்தைப் போற்ற வேண்டுமே
முன்னை கண்ட மோகம் மாற்ற
முடிவும் செய்ய வேண்டுமே
தன்னை எண்ணித் தாபம் நீக்கும்
தகைமை ஏற்க வேண்டுமே
உன்னை மட்டும் எண்ணி டாமல்
உலகை எண்ணு மானிடா
- கண்ணை விற்றுக் காண எண்ணும்
கல்லின் சிற்பம் போலவே
மண்ணை எண்ணி மாசு செய்தல்
மந்தை ஆட்டின் தன்மையே
தண்டம் என்ற தன்மை மாற்றத்
தாகம் கொள்ளு மானிடா
அண்டம் யாவும் அண்டி வாழ
அன்பில் ஒன்று சேரடா.
- வீரம் போற்றி வென்ற நாடு
வேற்று மைகள் ஏனடா
பாரம் யாவும் பார்த்துத் தாங்கிப்
பாதை ஏகிப் பாரடா
தீரம் சொல்லித் தேடிப் பாரு
தீமை ஓடும் வேறடா
தூரம் எல்லை தூர ஓடும்
தோது செய்யும் நாடடா !
- உற்ற வெற்றி உண்மை ஆகும்
உலகம் போற்றும் கூறவா
நற்ற வத்தை நாளும் காக்க
நலங்கள் என்ன தூரமா
முற்றும் விட்டு மூடி இட்டும்
முகத்தை மாற்றல் வேண்டுமா
பெற்ற தாயைப் பேணி டாமல்
பெருமை பேசல் நீதியா?
- சேர்ந்து வாழச் செம்மை வேண்டும்
செய்வ தென்ன கூறடா
சார்ந்து நிற்கும் சார்பு யாவும்
சர்வ சாட்சி ஆகுமா
கூர்ந்து நோக்க கூடி வாழும்
கொள்கை மாற்றம் செய்யுமா
தேர்ந்து நீயும் தேர்வு செய்து
தேடி உண்மை காணடா!
- மானம் போற்றி மனிதம் காத்து
மாற்றம் கண்ட பூமியில்
ஈனம் கொண்ட இடியை ஒத்த
இன்னல் என்ன செய்யுமே
ஊனம் நீக்கி உலகை மாற்ற
ஒன்று சேரும் வேளையில்
தானம் தந்த தகைமை யாவும்
தாங்கிக் காக்கும் நம்மையே !
- போரைச் சொல்லிப் புவியை வீழ்த்த
பொய்யர் செய்யும் சூழ்ச்சியை
நாரை போல நகர்வு செய்து
நாமும் நட்டம் நீக்குவோம்
ஊரை யாரும் உருட்ட எண்ணி
ஊறு செய்யும் வேளையில்
தேரின் தன்மை கொண்டு நாமும்
தேடும் வெற்றி வெல்லுவோம்.
- தொற்று நோய்கள் தொடரும் வேளை
தொடர்பைத் தள்ளி வைத்துமே
உற்ற நன்மை உடலில் காண
ஒருமைப் பட்டு வாழுவோம்
மற்று முள்ள மனிதர் வாழ
மனத்தில் எண்ணிச் சேருவோம்
நிற்க நாட்டில் நிதமும் நன்மை
நீதி காக்க வேண்டுமே
- மதங்கள் எல்லாம் மனிதர் வாழும்
மார்க்கம் சொல்லும் இடமாகும்
இதங்கள் ஏற்றால் இதயம் யாவும்
ஏற்கும் வாழ்வில் சுகமாகும்
தடங்கள் ஏனோ தனிமை நீக்க
தன்னில் மாற்றம் துணையாகும்
விடங்கள் போலே விரியும் பேதம்
வீழ்த்த அன்பே செலவாகும்
- நாட்டு மக்கள் நன்மை காண
நல்ல றங்கள் போற்றுவோம்
வீட்டை மட்டும் வேட்டும் தன்மை
மாற்றி நன்மைசெய்குவோம்
ஏட்டில் வைத்து எண்ணம் மூடும்
எத்தர் செய்கை நீக்குவோம்
பூட்டை நெஞ்சில் பூட்டி டாமல்
புத்தர் பாதை காட்டுவோம்.
--ச.பொன்மணி
******
Comments