சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க 20% பேருக்கே அனுமதி
இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க 20% பேருக்கே அனுமதி இந்திய வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க 20% பேருக்கே அனுமதி வழங்கப்பட உள்ளது. பதிவு: ஜூலை 14, 2020 17:28 PM புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் இந்த வருடம் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்ச்சிக்கு நாடு தயாராகி வருகிறது. வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவதும், பல முக்கிய பிரமுகர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்பதும் கடந்த வருடம் வரை நடந்து வந்தது.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளை நாடு சந்தித்து வரும் நிலையில் இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, இந்த ஆண்டு குழந்தைகள் பங்கேற்க அனுமதி இல்லை. தேசிய மாணவர் படையினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பிரதமர் சுதந்திர தின நிகழ்ச்சியில் உரையாற்றும்பொழுது, இரு புறமும் மேல் பகுதியில் வி.வி.ஐ.பி.க்கள் அமர்ந்திருப்பது வழக்கம். முன்பு இந்த எண்ணிக்கை 900 வரை இருந்தது. ஆனால், இந்த முறை அவர்கள் கீழ் பகுதியிலேயே அமர வேண்டும். அதுவும் நூறு பேர் வரையே அனுமதிக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் மற்றும் இந்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல், நிகழ்ச்சி நடைபெறும் செங்கோட்டையில் ஏற்பாடுகளை பார்வையிட கடந்த வாரம் சென்றனர். இதில், சமூக இடைவெளியை கவனத்தில் கொண்டு ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளிடம் அஜய் கேட்டு கொண்டார்.
கடந்த ஆண்டு வரை, பிரதமர் உரையாற்றும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் நிகழ்ச்சியில் பங்கேற்க வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் பிற பார்வையாளர்கள் என 20% பேருக்கே அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
|
Comments