என்றும் நம் நினைவுகளில் வாழும் மக்கள் கலைஞர்
நம் நினைவுகளில் வாழும் மக்கள் கலைஞர்
ஜெய்சங்கர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.
3-6-2000 அன்று காலமான அவரின் நினைவு நாள் இன்று
பட்டதாரியான ஜெய்சங்கர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள்
சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார்.
பின்னர் முதன் முதலாக 'மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.
அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.
ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது.
இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.
"நீ" படத்தில் ஜெயலலிதா வும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.
திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார்.
இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.
அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை.
ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும். ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார்.
1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.
தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார்.
சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை.
இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.
ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.
இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.
1978ம் ஆண்டு, ஜெய்சங்கர் நடித்து 13 படங்கள் வெளியாகின. இதில் பல படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.
1978ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் குறிப்பிடும்படியான ஆண்டு. இந்த வருடம்தான் எம்ஜிஆர் கடைசியாக நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில், கமலும் ரஜினியும் மளமளவென படங்கள் பண்ணினார்கள். இதே காலகட்டத்தில், ஒருபக்கம் சிவகுமார், இன்னொரு பக்கம் விஜயகுமார், நடுவே ஜெய்சங்கர் ஆகியோரின் படங்கள் வந்துகொண்டிருந்தன.
ஆனாலும் ‘வெள்ளிக்கிழமை ஹீரோ’ என்கிற பெயர் ஜெய்சங்கருக்கு இந்த வருடமும் அவரிடமே ஒட்டிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட, அவர் நடித்த 13 படங்கள் இந்த வருடத்தில் (1978) வெளியாகின.
‘அவள் ஒரு அதிசயம்’ என்ற படம். இவருக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். அடுத்து ஸ்ரீவித்யாவுடன் இணைந்து ‘இளையராணி ராஜலட்சுமி’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல கலெக்ஷனைக் கொடுத்தது.
அதேபோல், ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து நடித்த ‘உள்ளத்தில் குழந்தையடி’ என்கிற திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
’இது எப்படி இருக்கு?’ என்ற படத்தில், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஜெய்சங்கர். அவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அதைத்தானே! எனவே இந்தப் படமும் பி அண்ட் சி ஏரியாக்களில் சக்கைப்போடு போட்டது.
ஜெயசித்ராவுடன் இணைந்து ஜெய்சங்கர் நடித்த ‘சக்கைப்போடு போடு ராஜா; என்கிற படம் மிகப்பெரிய வெற்றி. அதேபோல், ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த ‘டாக்சி டிரைவர்’ ஏக எதிர்பார்ப்புடன் வந்தது.அதற்குக் காரணம் ’டாக்சி டிரைவர்’ ஜெய்சங்கரின் 150வது படம்.
‘மக்கள் குரல்’ எனும் படம். ஜெய்சங்கர் நாயகன். பிரமீளா நாயகி.
இதேபோல், ‘முடிசூடாமன்னன்’ என்றொரு படம். ஜெய்சங்கரும் ஸ்ரீதேவியும் நடித்தார்கள். மிகப்பெரிய வெற்றி. தமிழ் சினிமாவில், மிகக் குறைந்த செலவில் படமெடுத்து, மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்து, முடிசூடாமன்னனாகவே திகழ்ந்தார் ஜெய்சங்கர்.. ‘மேளதாளங்கள்’ திரைப்படம் அப்படித்தான் பெரிய வெற்றியைச் சந்தித்தது. கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என கலந்துகட்டி இருந்த இந்தப் படம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஸ்ரீதேவியுடன் ‘ராஜாவுக்கேற்ற ராணி’ என்ற படம், ஸ்ரீப்ரியாவுடன் நடித்த ‘வாழ நினைத்தால் வாழலாம்’ மிகப்பிரமாண்டமான வசூலை அள்ளியது. இருவருக்கும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில், ஜெயசித்ராவுடன் இணைந்து நடித்த ‘வண்டிக்காரன் மகன்’ ஏற்படுத்திய பரபரப்பு அந்தக் காலகட்டத்துக்காரர்களுக்கு இன்றுவரை மறக்காது.
‘வண்டிக்காரன் மகன்’ குதிரை வேகத்தில் சென்று வெற்றிக்கனியைப் பறித்தான்.
இந்தப் படங்கள் குறித்த இன்னொரு சுவாரஸ்யம்... இந்தப் படங்களின் தயாரிப்பு நிறுவனம் எதுவுமே மிகப்பெரிய கம்பெனி இல்லை. சின்னக் கம்பெனி, புதிய தயாரிப்பாளர்கள், சின்ன பட்ஜெட்டில் படமெடுத்தார்கள். எல்லோருக்கும் தோள் கொடுத்து தூக்கிவிட்டார் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கரை வைத்து படமெடுத்து,எவரும் நஷ்டப்பட்டதுமில்லை.
நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.
அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார்.
ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.
62-ஆம் வயதில் நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.
மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார்.
முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
.
வித்தியாசமான கதைகளுடன் பயணித்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் திரையில் பெற்றார்.அந்த நேரத்தில் இவருக்கு தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்ற இன்னொரு அடைமொழியும் உண்டு.இவர் நடித்த படங்களில் முக்கியமான மற்றும் சிறந்த திரைப்படங்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
- இரவும் பகலும்
- யார் நீ?
- குழந்தையும் தெய்வமும்
- இரு வல்லவர்கள்
- வல்லவன் ஒருவன்
- பட்டணத்தில் பூதம்
- நில் கவனி காதலி
- பூவா தலையா?
- மாணவன்
- நிலவே நீ சாட்சி
- கண்ணன் வருவான்
- நூற்றுக்கு நூறு
- ராணி யார் குழந்தை?
- கன்னிமுத்துப் பாப்பா
- அக்கரைப் பச்சை
- எடுப்பார் கைப்பிள்ளை
- ஒரே வானம் ஒரே பூமி
- முரட்டுக் காளை
- கீழ் வானம் சிவக்கும்
- ஊமை விழிகள்
.
இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்
மக்கள் விரும்பும் கலைஞராக இருந்தவர் ,ஆகவே இவரை மக்கள் கலைஞர் என்றும் அழைப்பார்கள்
இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி இன்று வரை மிக சிறப்பாக நடத்தி வருகிறார்
நம் நினைவுகளில் உள்ள அன்புள்ள மான் விழியே பாடலை காண
இன்னொரு பாடல்
ஒரு சண்டைக்காட்சி
--உமாதமிழ்
Comments