உலக ஆஸ்துமா தினம்
ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், உலக ஆஸ்துமா தினம், ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது.
நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததால் மூச்சுத் திணறல் உண்டாகி மூச்சுக்குழலில் உள்ள சுவாச சிறுகுழல் சுருக்கம் அடைகிறது.
இந்நோயினால் உலகம் முழுவதும் 235 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் 15- 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக்குழாயைப் பாதிக்கும் ஒரு ஒவ்வாமை நோயாகும். சுவாசக்குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது விசில் போன்ற சத்தம் கேட்பதோடு நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
மூச்சிரைத்தல், இருமல், மார்புப் பகுதி இறுக்கமாகுதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை நோயின் பொதுவான அறிகுறிகள்.
செல்லப் பிராணிகளின் உரோமம், துாசி, துாசியிலுள்ள சிறு பூச்சி, கரப்பான் பூச்சியின் கழிவுகள், மரங்கள் மற்றும் பூக்களின் மகரந்தத் துாள், மேல் பூச்சுப் பொருட்கள், சிகரெட் புகை, காற்றில் உள்ள மாசு, குளிர்ந்த காற்று, வெப்பநிலை மாற்றம், வண்ணப்பூச்சு பொருள் மற்றும் சமைக்கும்போது வரும் புகை, வயிறு மற்றும் உணவுக்குழாய்ப் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது, பரம்பரையாக (மரபணு கோளாறு), மேலும், மாறி வரும் வாழ்க்கை முறைகளான பாஸ்புட், உடலில் பவுடர் மற்றும் வாசனை திரவங்களை போடுவதால் ஆஸ்துமா ஏற்படுகிறது.
வேதியப் பொருட்கள், நோய்த் தொற்று, குடும்பப் பின்னணி மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதனாலும் ஆஸ்துமா வரும்.
வேதியப் பொருட்கள் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு - 07-05-2020 அன்று விசாகப்பட்டி னத்தில் 43 நாட்கள் மூடப்பட்டிருந்த ஓர் வேதிய ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் சுமார் 9 பேர் உடனடியாக உடனடியாக மரணம் அடைந்துள்ளனர்,. தவிர 200-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி, 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை உடனே வெளியேற்ற வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஊரடங்கில் வீட்டில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்த அனைவரும் அறிந்திருப்பீர்கள். இன்னும் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பதை காலம்தான் சொல்லும்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் போபாலில் உள்ள ஓர் ஆலையின் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உடல் நல பெறவில்லை. மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தெரியப்படுத்த இயலாது.
பெரியவர்களை விட இளைஞர்கள்தான் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்துமாவில் பல வகை உண்டு. ஒவ்வாமையால் வரக்கூடியது. பணிபுரியும் இடத்தால் வருவது, உடற்பயிற்சியால் வரக்கூடியது. இரவு நேரங்களில் வருவது என்று சொல்லலாம். ஆஸ்துமா தூண்டுதலுக்கு ஒவ்வாமையும், அதிகரித்து வரும் சுற்றுபுறச்சூழலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் மறைமுகமாக உடல் பருமன், உடல் உழைப்பின்மை, மோசமான உணவு முறைகள், மன அழுத்தம் போன்றவையும் ஆஸ்துமாவை ஊக்குவிக்கும் மறைமுக காரணங்களாகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் வாழலாம்.
ஏழு அறிவுரைகள்:
தொடர் உடற்பயிற்சி
ஆரோக்கியமான உணவு
மாசு நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருத்தல்
புகைப் பழக்கம் இருப்பின் கைவிடுதல்
எதிர்ப்பு சக்தி மருந்து உட்கொள்ளுதல்
காற்று வடிகட்டி
ஆஸ்துமா மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளுதல்.
(தொடரும்)
ReplyForward |
Comments