ஆர்ய வைத்தியசாலை பி.கே.வாரியர்
99வது பிறந்த நாள் கொண்டாடிய ஆர்ய வைத்தியசாலை பி.கே.வாரியர்
கோட்டயம்: கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை (ஏவிஎஸ்) மேனேஜிங் டிரஸ்டியும், ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கும் மூத்த டாக்டரான பி.கே.வாரியரின் 99 வது பிறந்த நாள் நேற்று (மே 22) கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை, கோட்டயத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில் தலைமை அலுவலகமான கைலாசமந்திரத்தில், தனது குடும்பத்தினருடன் எளியமுறையில் வாரியார் கொண்டாடினார்.ஊரடங்கு காரணமாக, ஆண்டுதோறும் ஆர்யவைத்திய சாலையில் உள்ள விஸ்வம்பரா கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையை இந்த ஆண்டு டாக்டர் தவிர்த்துவிட்டார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அவருடன், மகள் சுபத்ரா ராமச்சந்திரன், உறவினர்கள் ராகவ வாரியர், மாதவன்குட்டி வாரியர் உள்ளிட்ட 20 பேர் மட்டுமே உடன் இருந்தனர்.வாரியர், 1999ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2010 ல் பத்ம பூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
கடந்த 1921ம் ஆண்டு மலபார் மாவட்டத்தில் பிறந்தார். கோட்டக்கல் கிராமத்தில் உள்ள ஆர்ய வைத்திய பாடசாலையில் ஆயுர்வேதம் படித்து பட்டம் பெற்றார். இதன் பின்னர், கடந்த 1954ல் கோட்டக்கல் மாவட்டத்தில் செயல்பட்ட ஆர்ய வைத்ய சாலையின் (ஏவிஎஸ் )மேனேஜிங் டிரஸ்டியாக பதவியேற்றார். அதன் மூலம் வைத்யசாலையை நிர்வகித்ததுடன், அங்கு தலைமை மருத்துவராகவும் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், ஏவிஎஸ், பலமானதாக மாறியதுடன், பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
ஆயுர்வேதத்தை விஞ்ஞான ரீதியிலும் பயிற்சி எடுத்தும், கற்று கொடுத்தும் வரும் வாரியர், அதேநேரத்தில் மற்ற சிகிச்சை முறைகளையும் ஏற்று கொண்டு , அதனை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவர் எழுதிய பல கட்டுரைகள், உரைகள் சமகால மருத்துவ துறைக்கு பெரிதும் பயன்பட்டன. அவர் எழுதிய பல கட்டுரைகள் மலையாளத்தில் தொகுக்கப்பட்டு 'பாடமுத்ரகல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் ஆயுர்வேத கல்வி குறித்து கவனம் செலுத்தியுள்ளார். அவரது நிர்வாகத்தின் போதுதான் ஆயுர்வேத பாடசாைலை கல்லூரியாக மாறியது. மேலும், கோழிக்கோடு பல்கலையின் ஆயுர்வேத துறையின் டீனாக பதவி வகித்துள்ளார். ஆய்வு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார். அவரது பணியை பாராட்டி, கோழிக்கோடு பல்கலை, கடந்த 1999ம் ஆண்டு வாரியருக்கு டி. லிட் பட்டம் அளித்து கவுரவப்படுத்தியது. அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ் தலைவராக, 1981 மற்றும் 2003ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டார்.
ஏவிஎஸ்-இல் விஞ்ஞான முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த 1996 ம் மாஸ்கோவில் நடந்த ஆயுர்வேதம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி ரஷ்ய மருத்துவ அமைப்பு அழைப்பு விடுத்தது. இதன் பின்னர், 1998 ம் ஆண்டு வாரியர் தலைமையில் குழவினர் நியூயார்க் நகரில் நடந்த 21ம் நூற்றாண்டிற்கான ஆயுர்வேதம் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். நியூயார்க் நகரில், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிற்கான இந்திய பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் ஆயுர் வேதம் குறித்து உலகளவில் பரவ துவங்கியது.
Comments