புது விதி
கவிதை பக்கம்
புது விதி...!
நறும் பூக்கள் மீது
சிறுவண்டு அமர்ந்து
அரவங்கள் இன்றி
உள் இருக்கும் தேனை
உறிஞ்சி எடுக்கையில்
புலர்ந்தது புதுக்காலை!
கள் இருக்கும் பூவின்
கன்னங்கள் சிவக்க
கதிர்கள் பரப்பி
கன்னமிடும் கதிரவன்
என்னிடமும் வந்து
ஏதோ சொல்கிறான்!
மெல்ல வந்த தென்றல்
மேனி தழுவி செல்ல
முகம் மலர்ந்த பூக்கள்
முத்தமிட அழைக்குதே
மணல் பரப்பில் நானும்
மெல்ல நடை பயின்றிட!
மரபு கவிதை ஒன்று
செவியில் வந்து விழ
கடலின் அலை வந்து
கரையை கட்டி தழுவி
என் கால் நனைக்க
காலை கண் விழித்தது!
மலையில் பிறந்த நதி
மனதை குடைந்த படி
கூந்தல் புரள்வது போல்
கரைகள் புரண்டு வந்து
கடலின் மடி கலக்க
விடியல் விழித்ததிங்கே!
உறங்கும் மானிடத்தின்
விழிகள் திறப்பதற்காய்
விதிகள் கூறி விட்டேன்
வழிகள் கண்டு கொண்டு
வகையாய் எழுந்து விடு
புது விதி படைத்திடலாம்!
மலரும் காலை யாவர்க்கும் மகிழ்வாய் அமையட்டும்.
..மஞ்சுளாயுகேஷ்
Comments