மௌனத்தின் மேன்மை
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வளர்க மகிழ்வுடன்
வாழ்க நம்பிக்கையுடன்
வளர்க மேன்மையுடன்
உலகம் முழுவதும் ஊரடங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிற காலம் இது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இச்சமயத்தில் வீட்டில் எப்படி தனித்திருப்பது என்பது மிகப் பெரிய மன நலம் குறித்த பிரச்னையாக உள்ளது. நாம் சாதாரண நாட்களில் எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டேயிருக்கிறோம். ஏன், கோவிலுக்குள் சென்றால் கூட, இறைவனை தரிசிக்கும் மூல தலத்துக்கு செல்லும் வரையில் ஏதாவது பேசுவதென்பது அவசியம் என்ற நிலையில் மக்கள் இருக்கின்றனர். இத்தருணத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் நேரிடையாக அருள்நிதி என்ற பயிற்சிப் பட்டம் பெற்ற அடியேன் மௌனத்தின் மேன்மை பற்றிய அவருடைய கருத்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"நாம் பேசாதிருக்கும்போது இறைவன் நம்மோடு பேசுகிறான்."
இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை.
எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.
அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் மௌனம் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும்.
அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள்.
ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.
மறுபடியும் அதே கருத்து வரும்போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் நல்லதாக்கி விடலாம்.
இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே, நேரம் கொடுத்தால் தானே வரும்?
சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.
அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.
யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.
அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?
இதற்கு நேரம் தேவையில்லை.
எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி
மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல
மௌனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய
ஜீவகாந்த சக்தி அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக
ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும். அந்த மைய ஈர்ப்பு
அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும்
ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.
மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.
எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.
- - - - - - - - -
இப்பொழுது முதல் பத்தியிலுள்ளதை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு, தனிமையில் மௌனத்தை கடைபிடித்து வாழ்க்கையில் மேன்மையடைள, மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். மகரிஷி சொன்னதற்கும் நான் குறிப்பிட்டுள்ளதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்தே இதனை குறிப்பிட்டுள்ளேன்.
செ ஏ துரைபாண்டியன்
Comments