தரையில் எழுகின்ற அலைகள் ராஜகவி எழுதும் புதிய இரசனைத் தொடர்
தரையில் எழுகின்ற அலைகள் -
ராஜகவி எழுதும் புதிய இரசனைத் தொடர்
இதயத்தால் எழுந்து நான் கண்களால் பறக்கிறேன் என்னை வானம் செக்கச் சிவந்தவனாக்குக்கிறது
வானம் என்னை வானமாக்கிவிடுகின்ற ஒரு புள்ளியில் நான் பரந்து விரிகிறேன்
மேகங்களை இழுத்து வந்து நான் என் அறைக்குள் கட்டிப் போடுகிறேன்
செம்மேக மை எடுத்து என் உணர்வில் தெளித்துக் கோலமிடுகிறேன் எனது நரம்புகளிலில் இருந்து வண்ண வண்ண ஓவியங்கள் பட்டாம் பூச்சியாக வெளிப்படுகின்றன
இரவும் பகலும் இறுகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடை பெறுகின்ற ஒரு மகிழ்ச்சிப் பொழுதில் நான் உணர்ச்சிவசப்படுகிறேன்
கூடுகள் நோக்கிப் பறக்கின்ற தொலைதூரப் பறவைகளின் சிறகுகளில் நானும் அசைந்து கொண்டிருக்கிறேன்
சூரியன் மரணிக்கின்ற முதுமை நேரத்தில்
வானம் இருள் குளத்தில் மூழ்கி
மூச்சுத் திணறலாம் என்றாலும் தாரகைகளின் ஒளித் துணையால் வானம் சுவாசத்தைச் சரி செய்து கொள்கிறது
இருட்படை எடுக்கின்ற அப்பொழுதில்
தனித்து எழுகின்ற நிலாவை நான் என் கண்களால் தொடுகிறேன் நிலவு என்னை வானமென்று நம்பிவிடுகிறது
பகலில் வானம் ஒரு தேவதையின் முகத்தைப் போல அழகு காட்டினாலும் இரவில் கிழவியாகி விடுகிறது
மாலை நேரம் எழுதுகின்ற கவிதையை நான்
பூமியில் இருந்து படித்துச் சுவைக்கிறேன்
நான் இருளுக்குள் ஒளியாகிறேன்
காலை சிறுவனென்றால் மதியம் வாலிபனென்றால் மாலை கிழவன் அல்லவா
காலம் வாழ்வியலைப் பாடமாகச்
சொல்லித்தர நான் ஒரு மாணவனாக இருந்து கற்றுக் கொள்கிறேன்
வானம் பகலில் எவ்வளவுதான் வெளிச்சமாக இருந்தாலும் இரவில் இருளத்தானே வேண்டும்
வானத்தை ஏமாற்றும் சூரியனைப் பிடித்துக் கட்டி வைத்து அடிக்க வேண்டும் போலிருக்கிறது
ராஜகவி ராகில்
....
அலைகள் எழும்
Comments