பரமசிவன் பாதுகாக்கிறார்
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இவர் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் போலீசார் நித்யானந்தாவை தேடியபோது அவர் பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். இதையடுத்து புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவ்வப்போது அவர் தினமும் யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். டுவிட்டரில் அன்றாடம் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments