மகளிர்தின கவிதை யாசோதரைகள்
யாசோதரைகள்
*******
கவிதை
நடு இரவில்
உறவுகள் துறந்து
போதி மரத்தடியில் சரணடைந்து
ஆசைகள் அற்ற மனமே
ஞானம் என்ற புத்தன்
வெற்று சிலையானான்
பித்தனை போல் மனம் மாறி
சென்றவனை நினைத்து கலங்கியவள்
பிள்ளையை அரவணைத்து
தன் உணர்வுகள் கொன்று
வாழ வைத்த தெய்வமானாள்!
நாடு தோறும் புத்தன்கள்
தம் ஆசை தீர்த்து கொன்றாலும்
கடமை துறந்து போதையில் உழன்றாலும்
பொறுப்பு துறந்து பாரம் சுமத்தினாலும்
பாதக வார்த்தைகள் சொல்லி வதைத்தாலும்
தம் கை பொம்மையை போல்
பெண்களை ஆட்டுவித்தாலும்
யாசோதரைகள் ஏமாற்றம் மறைக்கிறார்கள்
கண்ணீரை விழுங்குகிறார்கள்
உழைத்து களைக்கிறார்கள்
புத்தர்களையும் மனிதர்களாக கருதி
நீங்காத அன்பு செலுத்துகிறார்கள்
இறுதியில் அவர்களுக்கும்
யாசோதரைகளே தாயாகிறார்கள்
தம் இயலாமை கொன்று
அவர்களை மடி தாங்குகிறார்கள்!
ஏதோ சில யாசோதரைகள்
ஆயுதம் தரிக்கும் போது மட்டும்
ஆசை துறந்த புத்தர்கள்
அரண்டு போகிறார்கள்
கலாச்சாரம் பேசி உயிர்பயம் கொள்கிறார்கள்
தன்னைப்பற்றியே கருதி
ஞானம் பெற்றவன் புத்தனென்றால்
தன்னைக் கரைத்து
மனதை வதைத்தவனை மன்னித்து
குடும்பம் தாங்கி காப்பவளென்றாலும்
ஆயுதம் தாங்கி உயிர் பறிப்பவளென்றாலும்
யாசோதரைகள் தெய்வம்தானே?!
-அமுதா சுரேஷ்
Comments