மோடிக்கு சந்திரபாபுநாயுடு புகழாரம்
மனித நேயத்துடன் செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் கரோனாவை எதிர்த்து இந்தியா போராடி வெற்றி பெறும் என பிரதமர் மோடிக்கு தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தநிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதாவது:
வெவ்வேறு பழக்க வழக்கங்கள், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெற்றிகரமாக மக்கள் ஊரடங்கு அமலானது. இதன் மூலம் உங்கள் தலைமையின் கீழ் கரோனா வைரஸை சரியான முறையில் இந்தியா எதிர்த்து போராடி மற்ற நாடுகளுக்கு உதாராணமாக திகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஏழை, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மூலம் 1 ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் உதவி திட்டம் பெருமளவு பாராட்டத்தக்கது. கரோானவை எதிர்த்து போராடும் மருத்து பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு அவர்களின் தியாகத்துக்கு வழங்கப்பட்ட மரியாதையாகும்.
உங்கள் தலைமையின் கீழ் மத்திய அரசு எடுத்து வரும் மனித நேயத்துடன் கூடிய இதுபோன்ற நடவடிக்கைகளால் கரோனா வைரஸை மட்டுமின்றி அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்த்து போராடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.’’ என தெரிவித்துள்ளார்.
Comments