மணமக்களுக்கு போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ரவுண்டானா லாலகுண்டா பகுதியில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும், போலீசாரின் தடியடி சம்பவமும் நடந்தது.
இந்த தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்
இந்தப் போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தங்களின் கண்டங்களை மெகந்தி போட்டும் தெரிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக ஷயின்ஷா, சுமையா ஜோடிக்கு நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின்அறிவுறுத்தலின்படி மணமக்களுக்கு போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.போராட்டக்காரர்களால் சமைக்கப்பட்ட மதிய உணவு திருமண விருந்தாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
வண்ணாரப்பேட்டையில் போராடி வருபவர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் ஜெயக்குமாரை அவரது சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும் என உறுதியளித்தார்.
Comments